#எனக்குக் #கவிதை #எழுதத்தெரியவில்லை...*

 *#எனக்குக் #கவிதை #எழுதத்தெரியவில்லை...*



கவிஞர். பாபு சசிதரன்

 20-08-2024, 2.12am



ஆலயத்தில்... அலுவலகத்தில்...

பள்ளியில்... குளிரறையில்... 

பேருந்தில்... மகிழுந்தில்...

தொடர்வண்டியில்...

தெருவில்... சாலையில்...

ஏன்., தன் வீட்டிலேயே...

சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட 

எம்தேவதைகளின் உடல்களை

கண்டு கதறி அழும் 

உறவுகளைப் பார்த்து

எனக்குக் கவிதை 

எழுதத் தெரியவில்லை...


தன்னிடம் இல்லா

உறுப்புகளுக்காகவே

உருக்குலைத்து... 

சீரழித்து... சிதைத்து...

சாக்கடையில்... புதர்களில்...

உயிரோடு துடிக்கத் துடிக்க

வீசி எறிந்த...

வலியின் அலறல்களைக் குறித்து

எனக்குக் கவிதை 

எழுதத் தெரியவில்லை...


இந்நிமிடத்தில்... 

இன்னொடியில்...

ஏதோ ஓரிடத்தில்... 

எங்கோ ஒரு...

எம் பெண்பிள்ளையின் உதடுகள் 

அபய(ம்)... அபய(ம்)... அபய(ம்)...

என்று ஒலித்துக் கொண்டே ஓடும்

இவர்களின் கூக்குரல்களை

அலட்சியப்படுத்தும் 

இச்சமூகத்தைக் குறித்து

எனக்குக் கவிதை 

எழுதத் தெரியவில்லை...





தண்டனைகள் பழுதாகிப்போய்

சட்டங்கள் சுணங்கிப்போய்

அகங்கார அதிகாரங்கள்

தைரியமாய் உலவும்

அநியாயத் திருநாட்டில்...

எம்தேவதைகளைப் பார்த்து 

ஏளனமாய் சிரித்தபடியே

உயிருடன் உலவும்

குற்றங்களைக் குறித்து 

எனக்குக் கவிதை 

எழுதத்தெரியவில்லை...


மன நோயாளிகளின் 

காமகுறிகளுக்கு

இரையாகிப் போகும்

எம் பெண்பிள்ளைகளின்

சிதைக்கப்பட்ட 

உறுப்புகளைக் குறித்து...

பிளக்கப்பட்ட 

யோனிகளைக் குறித்து...

அலறல்களின்

ரத்த ஆற்றில் குளிக்கும்

போதைப்பேய்கள் குறித்து...

காமபிசாசுகள் குறித்து...

எனக்குக் கவிதை 

எழுதத்தெரியவில்லை...


இன்னும் 

எத்தனைக் காலத்திற்கு

எம் நிலபெண்களைச் சீரழிப்பதை

பார்த்துக் கடந்து கொண்டே...

இந்நிலத்தைப் பெண்ணாகவே 

சொல்லிக் கொண்டிருக்கப் 

போகிறோம்...


கண்ணீரும்... கோபமும்... 

மேல்எழ

*#எனக்குக் #கவிதை* 

*#எழுதத்*தெரியவில்லை...




*********************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

10.5.2025 - யாவரும் கேளிர் கலை இலக்கிய மைய பேச்சரங்கம்: திரையில் வளர்ந்த தமிழ்

சர்வதேச மகிழ்ச்சி தின சிறப்பு நிகழ்ச்சி